உடல் நலக்குறைவால் நேற்று மாலை மரணமடைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.
காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.